மார்கழி நினைவுகள்
மார்கழி மாதக் குளிரில்
அதிகாலை நான்கு மணிக்கு
நடுக்கத்தைப் பொருட்படுத்தாமல்
தலைக்கு மஃப்ளர் கட்டிக்கொண்டு
"தெருவில் யார் கோலம் பெரியது" என்ற
போட்டியுடன் அவரவர் அம்மா போடும் கோலத்திற்கு
கலர் அடிப்போம் நாங்கள்.
வாண்டுகள் ஒன்று கூடி
ஒவ்வொரு கோலத்தையும் பார்வையிடுவோம்.
தெருவே வாய் பிளக்கும்படி
கோலம் போடுவாள் கோமதி அக்கா.
மயில் கோலம்,சங்கு கோலம்,சிக்கு கோலம் என
விதம் விதமாக இருக்கும்.
என் அம்மாவும்
என்னவெல்லாமோ போட்டுப் பார்த்து
ஓய்ந்தேவிட்டாள்
கோமதியக்கா கோலத்துடன் போட்டியிட முடியாமல்.
மணம் செய்துகொண்டு
ஊரை விட்டே கிளம்பிய அக்காவிடம்
கோல நோட்டை வாங்கி வைத்துக் கொண்டாள் அம்மா.
இத்தனை புள்ளி இத்தனை வரிசை என்று
அழகாக எழுதி வைத்திருந்தாள் அக்கா.
அதன் பிறகு வந்த மார்கழியில்
எங்கள் வீட்டுக் கோலமே நன்றாக இருந்ததை
சொல்லவும் வேண்டுமா....???
கால மாற்றத்தால் மகளிரும்
அதிகாலைத் துயில் எழாமல்
சீரியல்களில் மூழ்கிப் போயினர்.
கடந்த மார்கழியில் ஒரு நாள்
ஆறு மணிக்கு எழுந்து
வெளியே சென்று பார்தேன்.
ஒரு சில வீடுகளில்
சம்பிரதாயத்துக்காக
சின்ன 'சிக்கு' கோலம்.
அவசரமாக ஓடிச் சென்று
கோமதியக்கா நோட்டைத் தேட
தமிழ்ப் பண்பாடின் சில வழக்கங்கள்
மறைந்து கொண்டு வருவதன் அடையாளமாக
செல்லரித்துக் கிடந்தது அது.