Tuesday, April 18, 2006

வறுமை

காலை 9:30க்கு சாவகாசமாக எழுந்து
மெஸ் போய் பார்த்தால்
எனக்குப் பிடிக்கவே செய்யாத பொங்கல்.
வேறு வழியின்றி தட்டில் போட்டு
இரண்டு கவளம் மட்டும்
திக்கித் திணறி சாப்பிட்டு
மிச்சம் முக்கால் தட்டிற்கு மேல் இருக்க
எழுந்துவிட்டேன்..

கல்லூரியில் இருந்த
பற்பல CLUBகளுக்கு மத்தியில்
நான் ஆசைப்பட்டது போட்டோகிராஃப்பி மீது.
புகைப்பட போட்டியின் தலைப்பு--
'வறுமையின் நிறம்'.

'ஹோப்ஸ்' பாலம் பக்கம் சென்றேன்
குடிசை வாழ் மக்களைப் படம் பிடிக்க.
ஒரு சிறுவன் வேடிக்கை பார்த்தான்
கால் சட்டையில் ஓட்டையுடன்.
ஒரு பெரியவர்
அழுக்கேறிய வேட்டியுடன் இருமிக்கொண்டே
குறுக்குச் சந்தில் படுத்திருந்தார்.
அலுமினியத் தட்டில்
பழைய சாதம் சாப்பிட்டாள் ஒருத்தி
வழிந்த மூக்கைத் துடைக்காமல்.
வறுமை அன்றெனக்கு
புதுப்புது உருவத்தில்
பற்பல முகங்களைக் காட்டியது.
மதிய உணவின் போது
காலையில் நடந்ததெல்லாம்
நினைவுக்கு வர
என்றுமில்லாமல் அன்றைக்கு
'கவக் கவக்' என்று அள்ளி அள்ளித் தின்றேன்.
கண் கலங்கியதைக் கண்டு
'என்ன ஆச்சுடா மாப்ள'-- கேட்ட நண்பனிடம்
சலனமில்லாமல் பொய் சொன்னேன்
'மொளகா கடிச்சிட்டண்டா......'

0 Comments:

Post a Comment

<< Home