சாயம் போன கலர் கனவுகள்
எனக்கு மீசை அரும்பியிருந்த நேரம்.
ஷேவ் செய்தால் நன்றாக வளரும் என்று
நண்பன் சொல்லக் கேட்க
யாருக்கும் தெரியாமல்
அப்பாவின் ரேசரால் மீசையை மழித்து
நான் திட்டு வாங்கியபோது எனக்கு வயது 15.
பத்தாம் வகுப்பில் ஒரு நாள்
ஆங்கில ஆசிரியை அனிதா மேரி
ஒரு பெயரை உச்சரிக்க
'யாரடா அது...?' என்று திரும்பினேன்.
கனவுகள் கலர் கலராய் விரிந்தது அன்றிரவு.
காலையில் கண்ணாடி முன் நின்றால்
'அம்மை'யின் தழும்பு கூட அழகாக இருந்தது.
நண்பர்கள் எனக்கும் அவளுக்கும்
FLAMES போட்டுப் பார்த்து
‘L’ வந்ததால் பொதுமாத்து போட்டதில்
இரண்டு நாட்களாய் வலித்தது எனக்கு.
சைக்கிள் ஓட்டும்போது
அவள் எதிரில் வர
'பிலிம்' காமிக்கலாம் என்று
இரு கைகளையும் விட்டுவிட்டு
விழுந்து வாரியது
முட்டியில் விழுப்புண்ணின் தழும்பாக.
பொதுத் தேர்வுக்கு முன்
அனைவரும் சாமி கும்பிட
'சித்தானந்த சுவாமி' கோயிலுக்குச் சென்றோம்.
ஆளாளுக்கு நந்தியின் காதில் சொல்ல
நானும் என் பங்குக்கு
எங்கள் இருவரையும் சேர்த்து வைக்க வேண்டினேன்
அவளை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே.
அறியாப் பருவத்தில்
அவளால் பரவசமடைந்ததை
காதல் என்றெண்ணிய என் மடத்தனத்திற்கும்
என் செய்கைகளையெல்லாம்
சிலிர்ப்படைந்து ஆமோதிப்பது போல்
புன்னகை புரிந்த அவள் செயலுக்கும்
காலம் தான் காரணம் வைத்துள்ளது.
இன்றும் அவளது நினைவுகள்
என் மனதின் மூலையில் ஒட்டிக் கொண்டிருக்கிறது
ஒன்றுக்கும் உதவாத ஆறாவது விரல் போல்.
மனம் அமைதியற்று இருக்கும் வேளைகளில்
அக்கோயிலுக்குச் சென்று வருகிறேன்....ஆனால்
நந்தியின் காதில் மட்டும் எதுவுமே சொல்வதில்லை.

0 Comments:
Post a Comment
<< Home