Thursday, April 27, 2006

பாசம்

தம்பி தங்கையுடன் பிறந்தவர்கள்
முற்பிறவியில் புண்ணியம் செய்தவர்கள்.
எனக்குப் பிறகு மூன்று வருடம் கழித்து
ஒரு குட்டிப் பிசாசு பிறந்தாள்.

அப்பா வாங்கி வரும் கேக்கில்
என் பங்கை நான் தின்றுவிட
அவள் பங்கை ஒளித்து வைப்பாள்
பிறகு எனக்குக் காட்டித் தின்பதற்கு.
சில சமயம் ஒளித்து வைத்ததில்
அவளுக்குத் தெரியாமல்
பாதியை நான் தின்றுவிட
ஒரு மல்யுத்தமே நடக்கும் இருவருக்குள்.

சண்டையில் நான் முரட்டுத்தனமாக
அவள் அழும் வரை அடித்துவிடுவேன்.
காலை எழுந்து பார்த்தால்
பின் விளைவுகளாக என் கையில்
தூங்கும்போது அவள் கிள்ளி வைத்த காயங்கள்.

ஒரு ரூபாய் நாணயத்தில்
HMT சேர்த்தால் வாட்ச் கிடைக்குமென்று
அவள் சேர்த்து வைத்ததை எடுத்து
என் உண்டியலில் போட்ட காலம் உண்டு.

ஒரு முறை வலுத்துவிட்ட சண்டையில்
அவள் 'சொப்பு சாமான்' உடைந்துவிட
அப்பாவிடம் அடி வாங்க வைத்தது
இன்று என் நினைவில் மட்டுமே உள்ளது-
சுகமான வலியாய்.

விவரம் தெரிந்தவுடன் அவள்
என்னிடம் சண்டை போடுவதே இல்லை.
இன்றோ வளர்ந்து ஆளாகி நிற்கும் அவள்
கேட்காமலே என் சட்டையைத் துவைக்கிறாள்.
ஆனால் அவளிடம் நான் எதிர்பார்க்கும்
குழந்தைத்தனம் மட்டும்
எங்கோ சென்று ஒளிந்துகொண்டுவிட்டது.

0 Comments:

Post a Comment

<< Home