Friday, April 28, 2006

காணாமல் போனவள்

ஐந்தாம் வகுப்பு படித்த காலம்.
வகுப்பில் முதல் மூன்று இடங்களை
லதா,அபி,சரஸ்வதி மூவரும்
பரிட்சை தவணையில்
ஒருவர் மாற்றி ஒருவர்
குத்தகைக்கு எடுத்துக்கொள்ள--
நான் எப்பொழுதும் நான்காவது.

பள்ளி முடிந்த அந்தி வேளையில்
நண்பர்களுடன் ஆட்டம் போட்டுவிட்டு
சரஸ்வதி வீட்டில் ஆஜராவேன்
கணக்கு வீட்டுப்பாடத்தைக் காப்பி அடிக்க.

வீட்டினருகில் இருந்ததால் மட்டுமல்ல
ஏதோ ஒரு பாசம்
என்னை இட்டுச் சென்றது
அவள் வீட்டிற்கு.

மாதம் ஒரு முறையேனும்
'அசோக் நகர்' பூங்காவில்
விளையாட்டு கனஜோராக நடக்கும்.
நொண்டி விளையாட்டின் போது
மயில் போல் வேகமாக ஓடினாலும்
அவளையே துரத்தித் துரத்தி
தொட்டுவிட்டு அவுட் செய்வேன்.

ஒரு நாள் கிரிக்கெட் விளையாடும் போது
நடராசன் பந்தில் 'கோல்டன் டக்' ஆனதை
அந்தப் பக்கம் வந்த சரஸ்வதியிடம் தம்பட்டமடிக்க
அவள் தெரு முனையைக் கடந்தவுடன்
வைத்திருந்த மட்டையால் அவனைச் சாத்தியது
இன்றும் நிழலாடுகிறது என் மனதில்.

அந்த வருடத்திற்குப் பிறகு
குடும்பத்துடன் வேறு எங்கோ சென்றுவிட்டனர்.
என் வாழ்வில் கடந்து போனதற்கு சாட்சியாக
நாங்கள் எடுத்துக்கொண்ட போட்டோவில்
வகுப்பு ஆசிரியை பழனியம்மாள் அருகில்
அப்பழுக்கற்ற புன்னகையை வீசிக்கொண்டிருக்கிறாள்.

கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு
ஊர் சுற்றிக் கொண்டிருந்த மாதத்தில் ஒரு நாள்
'அசோக் நகர்' பூங்காவிற்கு சென்றேன்.
குழந்தைகள் உலகத்தின் கவலைகளின்றி
கூடி கும்மாளமிட்டு
நொண்டி விளையாடிக் கொண்டிருந்தனர்.
மனது கடந்த காலத்தை வட்டமிட
நானும் குழந்தையோடு குழந்தையாகி
விளையாட எத்தனித்து
செருப்பைக் கழற்றிவிட்டு நின்றேன்.
ஆனால் நான் துரத்திச் சென்று
அவுட் ஆக்க சரஸ்வதி தான் அங்கு இல்லை...

0 Comments:

Post a Comment

<< Home